தமிழீழத்தின் முதல் வித்து லெப். சங்கர்- மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்

19-06-1961 - 27-11-1982

லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர்.

சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு... வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்... தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா...?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன்.

'ஏதோ அறியாதவன். சில நாட்;கள் சுற்றிவிட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்" என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப்பயிற்சி பெறத்தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான்.


1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன்.... சங்கராக விடுதலைப் புலியாக மாறினான்.

சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதிபெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக... சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது.

சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப்பட்டு பளபளத்தது ரிவோல்வர்.

1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்துவிட்டது. அவனும் தேடப்பட்டான்.

1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கர் தாக்குதல் படைப்பிரிவில் ஒருவனானான்.

1982ஆடி 2ஆம் நாள் முதல்முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப்போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் ஏழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர் வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம்.

முதலில்... எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமானத் தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புகளுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுதவரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடமிருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப்படுகின்றது.

இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர்... இதை மோப்பம் பிடித்துவிடுகிறது கூலிப்படை.... வீடு முற்றுகையிடப்படுகிறது..... முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்துவிடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்துவிடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்துவிட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக்கொள்கிறார்கள்.

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவிட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்லமுடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை பாரதம் கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரைசேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாதநிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27-11-1982 அன்று ... விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான்.

தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி 'தம்பி" என்றவாறே சங்கர் உயிர் துறந்தான்.

தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.

தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே பாரதத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது.

இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000ற்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களையெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.

நன்றி
எரிமலை நவம்பர் 2000

தியாகி முத்துக்குமரன் பிறந்த நாளில் வீர்வணக்கம்

தமிழீழத்தைக் காக்கக்கோரி தன்னுயிரைக் கொடுத்து தமிழகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்திய முத்துக்குமரனின் பிறந்த நாள் இன்று. தமிழ்நாடு, தூத்துக்குடி மாவட்டம், புலியநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் (28) எனும் இளைஞ‌ர் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலக‌‌ங்கள் அமை‌ந்து‌ள்ள சாஸ்திரி பவ‌னு‌க்கு கடந்த ஜனவரி 29 அன்று காலை வந்து திடீரென, ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற கோரியும் சத்தமிட்டபடி உட‌லி‌ல்தீயை பற்ற வைத்தார்.

அவர் மீது எரிந்துக் கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டு உடனடியாக அவரை காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அ‌ங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப‌ட்டும் பயனின்றி இறந்தார். இறக்கும் முன்பு முத்துக்குமார் காவற்துறையினரிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், "இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன். வேறு எங்கும் தீக்குளித்தால் சாதாரணமாக விட்டு விடுவார்கள். எனவே தான் மத்திய அரசு அலுவலகத்துக்குள் சென்று தீக்குளித்தேன். இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் பெரிய அலை கிளம்பி உள்ளது. எனினும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத் தமிழர்களில் நிறைய புத்திசாலிகள் இருக்கின்றனர். அவர்கள் பலியாவது வேதனையாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார்.

இத்தியாகியின் பிறந்த நாள் இன்று என்பது தமிழர்கள் அனைவரும் நினைவுகூற வேண்டியது அவசியம்.

தேசியத் தலைவருக்கு Facebook இல் விசிறியாக விரும்புகின்றீர்களா ?

தேசியத் தலைவர் மான்புமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு

உரிமையோடு சுடரேற்றி உறுதிஎடுக்கும் மாவீரர் நாள்

1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது.

அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழிற்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மயிரிழை வேகமெடுத்துள்ளது. சோகநதிகளாய் தமிழர் கண்ணீரும் சேர்ந்து பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஆறறோரத்து அகதிமுகாம்கள், வயல்மேட்டின் புற்றுப்பிட்டிகள், வீதியோரங்களென விரிந்திருக்கும் இடப்பெயர்வின் துயர வாழ்வுக்குள்ளும் ஏதோ ஒரு திடமான நம்பிக்கை...
"எங்களுருக்கு மீண்டும் செல்வோம்" "அந்த மகிழ்வான வாழ்வுகையில் கிட்டும்" "நாங்கள் கொடுத்திருக்கும் விலை கொஞ்சநஞ்சமல்ல." "போட்ட முதலை செலவாய் எண்ணிவிட முடியாது அறுவடை எடுத்துத்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் எங்களுக்கு..." என்ற உண்ணத்து நம்பிக்கைகளும் உணர்வுகளும் எம்மை வலுவாகவே பற்றி நிற்கின்றன.

இந்தநிலையில் உணர்வுகளில் உறுதி ஏற்றிக்கொள்வதற்காய் எம்முன்னே விரிகிறது இன்றைய நாள் கார்த்திகை 27, மாவீரர்களுக்காய் எடுக்கப்படுகின்ற பெருவிழா அல்ல, அவர்கள் நினைவிடயங்களின் முன்னே உறுதி ஏற்றிக்கொள்கின்ற உன்னத நாள் எங்கள் நம்பிக்கைகளின் மகத்துவங்களாய் மண்ணில் உறங்கும் மானிட தெய்வங்களுடன் மனம்விட்டுப் பேசும் உயிர்ப்புநாள், இந்த நாளுக்காக இன்று தமிழர் மனங்கள் மனமுருகி நின்கின்றன.

சிங்களப் பேரினவாத இனமொன்றினால் அதன் அரச இயந்திரத்தாலும் சிறுபான்மைத் தமிழினம் அழிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர்க்க முடியாத தெரிவாய் ஆயுதத்தைக் கொண்டு அழிப்பவனை அழிக்கும் எமது விடுதலைப்போராட்டம் தொடங்கியது. படைவளம், படைப்பலம் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராய் ஒரு சில உணர்வுள்ள தமிழ் இளையோரால் தொடங்கப்பட்டதே இந்த விடுதலைப்போராட்டம், ஆட்பல ஆயுதப்பல ஒப்பீடுகளுக்கு அப்பால் எந்தவகைத் தியாகத்தையும் செய்யத்துணிந்தெழுந்த போராளிகளின் மனபலம் தனிப்பெரும் சக்தியாகவே தமிழரைக் காத்து நின்றது. அந்தக் காப்பு சகத்திகளின் சாட்சியாக 22000 இற்கு அதிக மாவீரர்களை இந்த மண்ணிலே விதைத்து இன்று உறுதிபெற்று நிற்கின்றோம்.



ஒவ்வொரு மாவீரரின் உயிர்த்தியாகமும் ஒரே இலட்சியத்தைக் கொண்டதெனினும் அவர்களின் தியாகவடிவங்கள் தனித்துவமானவை."எனது மரணத்தின் பின்னால் இந்த மண் மகிழ்வான வாழ்வைப்பெறும் என்ற நம்பிக்கையில் போகிறேன்" என சொல்லிப்போன கரும் புலி மாவீரர்களினதும் "எனது வித்துடலைத் தாண்டித்தான் எதிரி எம் மண்ணை ஆக்கிரமிக்கமுடியும்" என இறுதிவரை உறுதியுடன் போரிட்டு வீழ்ந்த மாவீரர்களினதும், தாய் மண்ணின் இரகசியத்தைக் காப்பதற்காய் கடலிலும் தரையிலுமாக தம்மைத்தாமே மாய்த்துக்கொண்ட மாவீரர்களும் என மாவீரர்களின் தியாகப்பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.

அந்த அத்தனை மாவீரர்களினதும் வீரச்சாவு நிகழ்ந்த நாட்களும் வேறுபாட்டவை. எனினும் ஓரே இலட்சியத்திற்காய் விதையாகிப்போன மாவீரர்களை நினைவுகொள்ள கார்த்திகை 27ஐ தெரிவுசெய்த சம்பவமும் எமது விடுதலைப்போராட்டத்தில் தனிப்பதிவாய் அமைந்தது.ஒரு சில போராளிகளாய் உருவாகி பரந்திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் திருக்கின்ற எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவுp போராட்டப் பாதையை செப்பனிட்ட காலமது. அந்தக் காலப்பகுதியில் தான் விடுதலைப்போரின் முதல் வித்தொன்று 1982.11.27 அன்று லெப்.சங்கராக வீழ்ந்தது.

லெப்.சங்கரின் பின்னால் பலவடிவங்களில் மாவீரர்களின் தியாகப் பயணங்கள் பதிவாகி வருகின்றன. இலட்சியத்தில் மாற்றம்பெறுகின்ற எமது விடுதலைப்போரின் ஒவ்வொரு மாற்றங்களிலும் வித்தியாசமான தியாக வடிவங்கள் பிரசவித்திருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு யாழ்குடா வடமராட்சியை முற்றுமுழுதாய் ஆக்கிரமித்துவிடவேண்டுமென்ற துடிப்புடன் படைநடவடிக்கையை மூர்க்கமாக முன்னெடுத்த சிங்களப் படைகளுக்கு கரும்புலி கப்டன் மில்லர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய படைமுகாமில் கொடுத்த கரும்புலித் தாக்குதல் அன்றைய கால சூழ்நிலையே மாற்றிப்போடும் அளவிற்கு வீரப்பதிவு ஒன்றை எமது போராட்டத்திற்கு தந்திருந்தது.

அந்த ஒரு மாவீரனின் உயிர்க்கொடை சிங்கள தேசத்தின் அத்தனை வீரிய இராணுவ மமதையையும் ஒரே நொடியில் அதலாபாதாளத்தில் வீழ்த்தியது. அந்த மாற்றத்தால் அப்போதைய ஜெ.ஆர்.அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு செல்லவேண்டி கட்டாயம் வந்தது என்பது வரலாறு.

அதன்பின் இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஒன்று உருவாக அமைதிப்படை என்ற பேரில் இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் வந்திறங்கியது. தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலாத அந்த ஒப்பந்தம்குறித்தும், இங்குவந்திறங்கிய அமைதிப்படையின் சுயவடிவம் குறித்தும் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியாகவேண்டிய தருணமது. அமைதிப்பேச்சுக்கள் உடன்பாடு நிர்ப்பந்தங்களென அமைந்த அந்த சூழலில் பொதிந்துகிடக்கும் பின்னிலை அபாயங்கள் தமிழ்மக்களுக்கு சாதகமற்றதாகவே இருந்தது.

இந்நிலையில் இந்திய அரசின் உண்மைத்தோற்றத்தையும் தமிழீழ பகுதி எங்கும் ஆயுதங்களுகடன் குவிந்து கிடக்கும் இராணுவப் பிரசன்னத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டும்தருணத்திற்காய் எமது ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டம் அன்று அகிம்சைப் போராட்டம் ஒன்றை நடத்தவேண்டியதாயிற்று. நல்லூர் கந்தன் முன்றலில் லெப்.கேணல் திலீபன் தமிழ்மக்களின் பிரச்சினைத் தீர்விற்கான ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாநோன்பை தொடக்கினான்.

இலட்சக்கணக்கில் மக்கள் கண்ணீருடன் திரண்டிருந்த 12 நாட்கள் தொடர்ந்த அந்த அகிம்சைப் போருக்கு இந்தியா இறுதிவரை செவிசாய்க்கவில்லை. அந்த மக்கள் முன்னிலையிலேயே அந்த அகிம்சை நெருப்பு அணைந்துபோனது. ஆனால் தமிழர் மனங்களில் இலட்சிய நெருப்பு வேகமெடுத்தது. அந்தத் தியாக மரணம் எமது விடுதலைப்போராட்ட வீரர்கள், வல்லரசு ஒன்றுடன் பொருதும் மனஉறுதியை பெற்றுத்தந்தது. அச்சம்பவத்திற்குப் பின்னே இடம்பெற்ற இந்திய இராணுவத்துடனான மோதல் எமது விடுதலைப்போராட்டத்தின் முதல் பெண் மாவீரரை இந்த மண்ணில் விதையாக்கியது.


பெண் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கிடந்த எமது சமூக அமைப்பிலிருந்து போராடும் திறன்கொண்ட வல்லமைபடைத்த பெண்களை உருவாக்கிய வரலாற்றுக்கு சான்றாய் 10.10.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலின்போது 02 ஆம் லெப்.மாலதி என்ற முதல்பெண் மாவீரர் தன் உயிரை ஈந்து வரலாற்றில் பதிவானாள். இவ்வாறாக எமது மாவீரர்களின் வீர தியாகப் பதிவுகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை, அந்தவகையில் தமீழ விடுதலைப்புலிகள் என்ற போராளிக்கட்டமைப்பிற்கு அப்பால் மக்கள் படைக்கட்டுமானத்தால் எழுச்சிகொணட, எல்லைப்படை , சிறப்பு எல்லைப்படை, போர் உதவிப்படை, துணைப்படை போன்றவற்றின் ஊடாகவும் எமதுவிடுதலைப்போராட்டத்தின் மாவீரர் பதிவுகள் நீள்கின்றன.

அவை தவிர சிறப்புப்படை, காவல்துறை படைக@டாகவும் தமதுஉயிர்களைத் தியாகம் செய்து மாவீரர்களாய் உறங்கும் மகத்துவங்களையும் இந்த மண்பெற்றிருக்கிறது. இந்த அத்தனை மாவீரர்களுக்கும் தனிச் சிறப்பான பக்கங்கள் உண்டு. ஒவ்வொரு மாவீரர் குறித்த பதிவுகளையும் நாம் வரலாறாய் பார்கின்ற இச்சந்தர்ப்பத்தில் தாயகம் கடந்து எங்கெங்கோவெல்லாம் சென்று சாதனை படைத்துவிட்டு சரித்திரமாய் உறங்கும் முகம் காட்டா கரும்புலி மாவீரர்களின் தியாகங்கள்உச்சத்தைத் தொட்டு நிற்கின்றன.

சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சாதனைகளை மட்டுமே எமக்காய் சாற்றிவிட்டு சந்தனப்பேழையும் காணாது முகம்மறைத்து, முகவரி மறைத்து வெடியாகிப்போன அந்த மாவீரர்களின் தியாகம் பற்றியும் அவர்களின் உணர்வுகள் பற்றியும் யாரும் மதிப்பீடு செய்துவிட முடியாது.இவ்வாறாக இந்த மண்ணிற்காய் விதையாகிப்போன பல்லாயிரம் மாவீரர்களின் நினைவிடத்தின் முன்னின்று நாம் எதைப் பேசப்போகின்றோம்.

எதை நினைத்து சுடர் ஏற்றப்போகின்றோமென்ற கேள்விகளுக்கு விடைகாணவேண்டியவர்களாக நாமே உள்ளோம்இத்தனை விதைப்புகளுக்குமான அறுவடை எமக்கானது மட்டுமே. அந்த அறுவடையை நாம்தான் பெற்றாகவேண்டுமென்ற உறுதிப்பாடை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் எடுத்தாகவேண்டும். இதுவே அந்த மாவீரர்களின் இலட்சியக்கனவை நிறைவேற்ற உதவும்.


ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும், தமிழீழ மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு.

ஏனைய நாடுகளில் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழாக்கள் எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை.

ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எதிரியின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடத்திக் கொண்டு தமிழீழ மக்கள் மண்ணின் விடிவிற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை எழிற்சியோடு நினைவு கூர்ந்து வருகின்றனர். மாவீரர்களின் பெற்றோர்கள் குடும்பத்தினரை போற்றிச் சிறப்பிக்கப்படுகின்றனர்.


வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டும், நடுகற்கள் நாட்டப்பட்டும் வழிபாடியற்றப்படுகின்றது.

மாவீரர் நாளில் மாவீரரின் பெற்றோர், குடும்பத்தினர் மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றிமதிப்பளிக்கப்படுகின்றனர்.

உலகிலே எங்குமே மாவீரர் நாள் நிகழ்வுகள் போல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள், அவர்களின் பெற்றோரும், குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ, நடைபெறுவதாகவோ வரலாறுகள் இல்லை.

மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும், நடைமுறை ஒழுங்குகளும்

1989ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாளை மாவீரர் நாளாகவும் 1990ஆம் ஆண்டில் இருந்து 1994ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள் வரை மாவீரர் எழுச்சியாகவும்(வாரமாகவும்) தமிழீழ மக்கள் எழுச்சி நிகழ்வாக நடைபெற்று வந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள்வரை மூன்று நாட்களில் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இது ஒரு மீள்பதிவு

தமிழீழப் பாடல்கள் காணொளி

மாவீரர் நினைவுச் சின்னம்-காணொளி


கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர்.

இப்பட்டயத்தை அணிவதன் மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவு கூருவதுடன் எமது உரிமைப் போராட்டத்தினை மற்றைய இனத்தினர்க்கும் எடுத்துக் கூறிவருகின்றனர்.

எமது மாவீரரின் நினைவுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம்.

இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக விற்பனை நிலையங்களிலும், பொது இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

''தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்''


தமிழ் இளையோர் அமைப்பு - கனடா

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை - 09

திருகோணமலையில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் பிரச்சனையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துரைத்து பல செயற்பாடுகளை காண்பித்தவர் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம்.

ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் திருமலையின் பிரச்சனைகள் பூதாகரமாகும். தமிழ் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கதைக்கும் போது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனைச் சத்தம்போட்டு, மேசைகளில் அடித்து பேசவிடாமல் குழப்புவார்கள். ஆனாலும், தமிழ் உணர்வாளர்கள் சிங்களத்தின் இந்தக் கெடுபிடிகளுக்குள் இருந்து கொண்டும் தமிழர் பிரச்சனைக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான். இவ்வாறுதான் தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், திருகோணமலையில் சிறீலங்காப் படையினரின் கடல் வலைய தடைச்சட்டம் தொடர்பாகவும் வன்னியில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு 06.04.2006 அன்று இரவு செவ்வியளித்திருந்தார்.

செவ்வியளித்த மறுநாள் காலை திருமலை துறைமுக சிறீலங்காவின் காவல் நிலையத்திற்கும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குமிடையில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மத்திய கிளையினுள் விக்கினேஸ்வரன் நுழையும்போது ஒட்டுக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். இவரின் இழப்பு திருகோணமலையில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய இழப்பாக கருதப்பட்டது. இந்தப் படுகொலையானது, ஜெனீவா பேச்சுக்களிலிருந்து விடுதலைப் புலிகளை விலகச் செய்யும் முயற்சியயன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டனம் வெளியிட்டிருந்தனர். இவரது தமிழ் உணர்வு செயற்பாட்டினை கெளரவித்து தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் என்ற உயர் விருதை வழங்கி கெளரவித்திருந்தார்.

‘இவரது வாழ்வு திருமலை மண்ணோடும் மக்களோடும் ஒன்றியதாக இருந்தது. இவர் திருமலை மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். அங்கு தலைவிரித்தாடும் இராணுவ ஒடுக்குமுறையையும் நில ஆக்கிரமிப்பையும் முழுமூச்சாக எதிர்த்து நின்றார். எமது மண் எமக்கே சொந்தம் என்று உரிமைக் குரலை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு மத்தியில் நின்றுகொண்டே உலகுக்கு உரத்துக் கூறினார்' என தமிழீழ தேசியத் தலைவர் இவரது தேசத்திற்கான பங்களிப்பையும் அதற்காக துணித்து செயற்பட்ட அவரது வீரத்தையும் தனது அறிக்கையில் எடுத்துக் கூறியிருந்தார். இவரின் உடலம் வன்னிக்கு எடுத்துவரப்பட்டு பல இடங்களில் பெருமளவான மக்களினதும் போராளிகளினதும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு திருகோணமலையில் அடக்கம் செய்யப்படுகிறது.

இவரது படுகொலை தொடர்பிலான அறிக்கையை திருமலை கண்காணிப்புக் குழுவினர் கொழும்பு தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தது. படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்நாள் கடல்வலயத் தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக கடற்றொழிலாளர்கள் அமைப்புடன் கண்காணிப்புக் குழுவினரைச் சந்தித்து நீண்டநேரம் விவாதித்திருந்தார். இப்படுகொலை தொடர்பில் பலரிடம் விசாரணை நடத்திய கண்காணிப்புக் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தின் நிழற்படங்களையும் இணைத்து அறிக்கை தயாரித்து கொழும்புக்கு அனுப்பி வைத்தது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கண்காணிப்புக் குழுவிடம் விக்னேஸ்வரன் பலமுறை முறைப்பாடு செய்திருந்தமையும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. இவரது படுகொலையின் தொடர்ச்சியாக திருகோணமலையில் சில வன்முறை சம்பவங்கள் வெடிக்கின்றன.

சிங்கள காடையர்களால் தமிழ் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு, கைக்குண்டுத் தாக்குதல்கள் என தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. பாடசாலை மாணவர்கள் கூட சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். படையினரால் வல்வளைக்கப்பட்ட சம்பூர் பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலையமாக படையினரால் அறிவிக்கப்படுகின்றது.

இதன்பின்பு மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் சிங்கள கடல் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபடுகின்றார்கள். இன்னொரு பக்கம் பெளத்த மதத்தை கட்டியயழுப்புவதில் சிறீலங்கா இராணுவம் ஈடுபடுகின்றது. வெருகல், 45ம் கட்டை, வாழைத்தோட்டம், கல்லடி, புன்னையடி, இலங்கை துறைமுகத்துவாரம் போன்ற பகுதிகளில் பெளத்தமதம் வளர்ந்த வரலாற்று சின்னங்கள் இருப்பதாக சிறீலங்கா படையால் அறிவிக்கப்படுகிறது.

(இக்கிராமங்கள் வெருகல் 18 பிரதேச சபைக்குள் அடங்குபவை) 45ம் கட்டை எனப்படும் இடத்தில் பெரிய பெரிய பாறை கற்கள் மலைகள் உள்ளன. இவற்றில் கோயில்களும் உள்ளன. அவ்வாறான சில பாறைகளின் உச்சியில் புத்தர் சிலை நாட்டப்படுகிறது. கல்லடி எனப்படும் இடத்தில் 120 அடி உயரம் கொண்ட மலை காணப்படுகிறது. அதன் உச்சியில் முருகன் ஆலயம் உள்ளது. சில விசித்திரமான எழுத்துக்கள் அந்த மலையில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதனை சிங்கள மூதாதையர்களைக்கொண்டு சிறீலங்கா அரசு ஆய்வு செய்து, தொன்மையான பெளத்தமதம் இருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிடுகின்றது.

இதன்பின்பு அங்கும் பெளத்த விகாரை அமைக்கப்படுகின்றது. அதேபோல் இலங்கைத்துறை முகத்துவாரத்தில் 70 அடி உயரம்கொண்ட கடற்கரை அருகில் கல்லுமலை ஒன்று உள்ளதாக இதன் உச்சியில் வேளாங்கன்னி மாதா கோவில் உள்ளது. அருகில் பெரிய ஆற்று தொடுவாய் உள்ளது. இதனை எல்லாம் ஆராய்ந்துவிட்டு பெளத்த மதம் சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உண்டு எனத் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறு சம்பூர் பிரதேசத்தில் மலைகளிலும் ஆற்று மரங்களின் கீழும் புத்த விகாரைகள் கட்டப்பட்டு பெளத்த மதம் பரப்பப்படுகின்றது. தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க, இந்தியாவுடன் அனல்மின் நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் எழுதப்படுகிறது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடம் சம்பூர்.

சொந்த வீடுகள், விவசாயக் காணிகள் இங்குள்ளன. தமிழ் மக்களின் பூமிமை அயல்நாட்டிற்கு தாரை வார்க்கின்றது சிறீலங்கா. தமிழர்கள் நிலத்தையும் இழந்து சுற்றுச் சூழல் பாதிப்பையும் சுகாதாரச் சீர்கேட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இதன்மூலம் சிங்கள மக்களே பெருமளவு பயன் அடைய இருக்கின்றார்கள். அதாவது இந்தியாவின் அனல்மின் நிலையம் நிறுவப்பட்டால் அங்கு வேலை செய்பவர்கள் சிங்களவர்கள். பின்பு அவர்களின் குடும்பங்கள் அருகில் உள்ள தமிழ் கிராமங்களில் குடியேற்றப்படுவார்கள். இவ்வாறு ஒட்டுமொத்தமான தமிழின அழிப்பினை சிறீலங்கா அரசு நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் மேற்கொள்கின்றது. இதன் முதற்கட்டமே திருகோணமலையில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேற்றப்பட்டு, தமிழின உணர்வாளர்கள் அழிக்கப்பட்டு, தமிழ்மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தமிழர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டார்கள்.

(தொடரும்...)

நன்றி்:ஈழமுரசு

------------
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்
08.04.2006

தாயக விடுதலையைத் தனது வாழ்வின் அதியுயர் இலட்சியமாக வரித்து, அந்த உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்த உன்னத மனிதரை தமிழீழ தேசம் இன்று இழந்துவிட்டது. எமது தாயகத்தின் தலைநகரில் விடுதலைக்காக ஒளிர்ந்த ஒரு சுதந்திரச் சுடர் இன்று அணைந்து விட்டது. தமிழர் தேசியத்தின் ஒற்றுமைக்காகவும் ஒருமைப்பாட்டிற்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று ஒடுங்கிவிட்டது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முதுகெலும்பாக நின்று முனைப்புடன் செயற்பட்ட ஒரு தமிழினப் பற்றாளர் எதிரியின் கோரமான தாக்குதலுக்குப் பலியாகிவிட்டார். இந்த உன்னத மனிதரை இழந்து இன்று எமது தேசம் ஆறாத்துயரில் மூழ்கிக்கிடக்கின்றது.

திரு வ.விக்கினேஸ்வரன் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். உயர்ந்த குணவியல்புகள் கொண்டவர். அனைவரையும் கவர்ந்து கொள்ளும் ஆளுமை படைத்தவர். தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு தேசப்பற்றாளர். இவரது இழப்பு தமிழர் தேசத்துக்கு என்றுமே ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு.

தமிழீழத் தனியரசே தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதியான உறுதியான தீர்வு என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர். தமிழரின் உயிர்களையும் உடைமைகளையும் அழித்து, தமிழரின் நிலத்தையும் வளத்தையும் சூறையாடி, ஒட்டுமொத்தமாக தமிழரின் தேசிய அடையாளத்தையே சிதைத்துவிடும் நோக்குடன் சிங்கள அரசுகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இனஅழிப்பு போரை இவர் முழுமையாக எதிர்த்து நின்றார். இந்த அழிவில் இருந்து தமிழீழ மக்கள் முழுமையாக விடுபட்டு, விடுதலை பெற்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ்வதையே தனது குறிக்கோளாக வரித்துக்கொண்டார். வரித்துக்கொண்ட குறிக்கோளில் உறுதி தளராது, பாதை விலகாது பயணித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று, தமிழீழ விடுதலைப் போராட்டதிற்குப் பல்வேறு வழிகளிலும் பங்களிப்புச் செய்தார்.

இவரது வாழ்வு திருமலை மண்ணோடும் மக்களோடும் ஒன்றியதாக இருந்தது. இவர் திருமலை மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார். அங்கு தலைவிரித்தாடும் இராணுவ ஒடுக்குமுறையையும் நில ஆக்கிரமிப்பையும் முழுமூச்சாக எதிர்த்து நின்றார். எமது மண் எமக்கே சொந்தம் என்று உரிமைக் குரலை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு மத்தியில் நின்றுகொண்டே உலகுக்கு உரத்துக் கூறினார். சிங்களப் பேரினவாதிகளின் கெடுபிடிச் செயல்கள் ஒருபுறமும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மறுபுறமுமாக தினம் தினம் எத்தனையோ நெருக்குதல்களையும் சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து நின்றபோதும் அஞ்சா நெஞ்சுடனும் அபாரமான துணிச்சலுடனும் அநீதியை எதிர்த்துப் போரிட்டார். திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக இருந்து அந்த மாவட்டத்தில் தமிழ்த் தேசிய இனக்கட்டமைப்பு இறுக்கம் பெற்று, பலம்பெற்று வளர அயராது உழைத்தார். இவரது பெரும் பணி என்றும் பாராட்டுக்குரியது.

திரு வ.விக்கினேஸ்வரன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே.பிரபாகரன்
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!


தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

தாயககீதங்கள்
குண்டு மழையிலும் குருதி வெள்ளத்திலும் நின்று வடிக்கப் பட்ட தாயக கீதங்கள்


மாவீரர் நாள் 2009

nerudal-annaithink

மாவீரர் நினைவுப் பாடல்: தாயாக மண்ணின் @ Yahoo! Video

உலகளாவிய ரீதியில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் பற்றிய விபரங்கள்

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை - 08


திருகோணமலையில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியயேறியது சிறீலங்காவிற்கும் அவர்களுக்கு துணை நின்ற இந்தியாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருகோணமலையில் இருந்து விடுதலைப் புலிகளை அகற்றிவிட்டதாகவும், துறைமுகத்துக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் நீங்கியதாகவும் திருமலையில் எதுவித பிரச்சினையும் இல்லை என்றும் மகிழ்ச்சியின் பூரிப்பில் சிறீலங்கா அரசாங்கம் பல அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்தது. அமைச்சர்களும் அதிகாரிகளும் இதனைப் பெருமைப்பட ஊடகங்களுக்கு கூறிக்கொண்டிருந்தார்கள். இதேவேளை, சிறீலங்கா அரசின் போர் வெறிப் போக்கினை உலக நாடுகளுற்கு விடுதலைப் புலிகள் எடுத்துக்கூறினர். ஆனால், சில உலக நாடுகள் கூறிய கருத்துக்களை பொருட்டாகக்கூட எடுக்காமல் "செவிடன் காதில் ஊதிய சங்கு போல்' சிறீலங்கா அரசு நடந்துகொண்டது.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகள் இந்தப் போருக்கு பின்னால் பலம் பொருந்திய கரங்கள் இருக்கின்றன என்பதைப் புரியவைத்தன. ஏனெனில், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை மீறுகின்றார்கள் எனக் குற்றம்சாட்டிய சில சர்வதேச நாடுகள் கூட, சிறீலங்கா அரசாங்கம் வெளிப்படையாக போரை நடத்தியபோதும் மெளனமாக இந்தப் போரை வேடிக்கை பார்த்தன. தமிழர் பிரச்சினையில் எவ்வாறு உலக நாடுகள் பேச்சளவில் ஈடுபட்டனவோ அதேபோன்றுதான் இன்றும் உலக நாடுகளின் செயற்பாடு பேச்சளவிலேயே இருக்கின்றன. திருகோணமலையில் இருந்து விடுதலைப் புலிகள் அகற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அங்கிருந்து போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு வெளியேறியது. கண்களை மூடிய நிலையில் இருந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு திருமலையில் இருந்தாலென்ன, இருக்காமல் விட்டாலென்ன என்ற நிலைதான் தமிழ் மக்கள் மத்தியில் அப்போது காணப்பட்டது.

அத்துடன், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடு ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறேதான் இருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிறீலங்காப் படையினரின் போர்நிறுத்த மீறல்களைக் கண்டும், காணாததும் போலும் இருந்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், விடுதலைப் புலிகள் ஏதும் செய்துவிட்டால் அதனைத் தூக்கிப் பெரிதாக்கிக் காட்டுவதும், மற்றும் மாதத்தில் எத்தனை போர்நிறுத்த மீறல்கள் நடைபெற்றுள்ளன. எத்தனை தாக்குதல்கள் விடுதலைப் புலிகள் செய்தார்கள் என்று குற்றச்சாட்டை முன் வைத்தவர்கள், படையினர் எத்தனை தாக்குதல்கள் செய்தார்கள் எத்தனை போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டார்கள் என்பதை குறைத்துக் காண்பித்து அவர்களுக்கு உதவி புரிந்தார்கள். சிறீலங்காப் படையினரின் போர்நிறுத்த மீறல்கள், அதாவது வலிந்த போர்கள் கூட பெரிதாக கணக்கில் எடுக்கப்படவில்லை.

சிறீலங்காப் படையினரின் போர் நிறுத்த மீறல்களின் எண்ணிக்கையை தமது பதிவின்படி கண்காணிப்புக்குழுவினர் குறைத்தே கூறிவந்தது, அவர்களின் நடுநிலைமை தொடர்பான சில கேள்விகளையும் எழுப்பியிருந்தது. போர்நிறுத்தக் குழுவின் இவ்வாறான சில செயற்பாடுகள் ஈழ விடுதலைப் போரைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் வல்லரசு நாடுகளிடையே விடுதலைப் புலிகள் தொடர்பாக மேலும் தவறான எண்ணங்கள் ஏற்படுவதற்கு வழி வகுத்துக் கொடுத்தது. காரணம், போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவில் பலநாட்டு பிரசைகள் இருந்தார்கள். இவர்களின் அறிக்கைகள், புள்ளிவிபர வெளியீடுகள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கும் என்பது சர்வதேச நாடுகளின் எண்ணமாக அமைந்தது.

விடுதலைப் புலிகளின் அரசியல் போக்கு குறித்து எதிர்மறையான எண்ணக் கணிப்பீட்டினை இவர்களின் அறிக்கைகளும், புள்ளிவிபரங்களும் தோற்றுவித்தன. இதேவேளை, சமாதான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நோர்வே நாட்டின் செல்வாக்கினைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் பல வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துகிறார்கள். வேலைத் திட்டங்களுக்காக நிதி வடிவிலான உதவிகளும் கிடைக்கப்பெறுகின்றன. அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வழிகாட்டலில், அரசியல் பிரிவுப் பொறுப்பாராக இருந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த உதவிகளைப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். இதேவேளை, அரசியல் பிரிவின் செயற்பாடு பலம் பொருந்திய செயற்பாடாக காணப்படுகின்றது.

காரணம் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திட்டமிடலில் ஏனைய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கின்றார்கள். இதில் சில நாடுகள் நிதி வடிவிலும், ஏனைய வடிவங்களில் உதவிகளை வழங்கி, தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு மறைமுகமாக உதவிகளை மேற்கொள்கின்றன. உதவிய இந்த நாடுகளால் இவ்வாறான உதவிகளை மேற்கொள்ளலாமே தவிர, இலங்கையில் கால் ஊன்ற முடியாத நிலை. காரணம், பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்தியா பக்கத்தில் கண்ணிற்குள் எண்ணையை ஊற்றி இலங்கையைப் பார்த்துக்கொண்டிருக்கின்றது. இந்தியாவின் மறைமுக செயற்பாடுகள் இலங்கையில் கால் ஊன்றியிருப்பதை இந்த நாடுகள் அறிந்திருந்தன. இதனாலேயே அவை தமது தலையீட்டினை இலங்கையில் குறைத்துக்கொண்டன.

திருகோணமலையில் இருந்து விடுதலைப் புலிகள் வெளியேறிய நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள் மீது பல கெடுபிடிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக திருகோணமலையில் கடற்படையினரும், தரைப்படையினரும் குவிக்கப்பட்டு, வீதிச்சோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் தமிழர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள். இவ்வாறான நெருக்கடியான நிலையில் திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறியவர்களில் ஒருவராக மாமனிதன் விக்னேஸ்வரன் செயற்பட்டார். திருமலையின் தமிழ் மக்கள் பேரவைத் தலைவராக இவர் இருந்தார். திருகோணமலையில் எங்கும் சிங்களவர்கள் சிங்கள மொழியின் செல்வாக்கே அரச நிர்வாகங்களில் 80 வீததத்திற்கும் மேலாக காணப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக சிங்கள படையில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றார்கள்.

இந்த இராணுவ அதிகாரியின் திட்டங்கள், அபிவிருத்திகள் எல்லாம் எவ்வாறு இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. குறிப்பாக சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கே வளங்கள் அனைத்தும் இவரால் திருப்பப்பட்டுவிடும். அத்துடன், சிங்கள மொழியின் செல்வாக்கு இல்லாமல் திருகோணமலையில் ஒன்றுமே செய்யமுடியாத நிலை. தமிழ் மக்கள் படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும் என்றாலும் அது சிங்கள மொழியில்தான் நிரப்ப வேண்டும் என்ற கட்டாயம். மதம் ரீதியில் பெளத்த மதம் பரப்பப்படுகின்றது. மொழியாக சிங்களம் திணிக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் கூட பெளத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. ஏன் கோணேஸ்வரர் ஆலயத்திற்கு ஏறும் வழியில் கூட புதிய பெளத்த சின்னம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறே திருகோணமலையில் தமிழ் மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கடல் வலைய தடைச்சட்டம் போடப்பட்டு திருகோணமலை கடலில் மீன்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றது. இங்கு குறிப்பாக தமிழ் மக்களே கடல் தொழிலை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தார்கள். ஆனால், தமிழர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட நேரம் மாத்திரம் மீன்பிடிக்கலாம். அதுவும் வலுக்கூடிய இயந்திரங்கள் படகில் பொருத்தக்கூடாது. படகில் இரண்டு பேருக்குமேல் செல்லக்கூடாது என்று பல தடைகள் போடப்படுகின்றன. திருமலை கடலில் மீன்களின் நடமாட்டம் கூடுதலாகக் காணப்படும் சில இடங்கள் இருக்கின்றன. இவ்வாறான இடங்களில் எல்லாம் மீன்பிடிக்கக்கூடாது என்றெல்லாம் சட்டம். இவை ஒரு புறம் இருக்க, தென்பகுதியில் இருந்து பெருமளவான சிங்கள மீனவர்கள் தொழிலுக்காக திருகோணமலை வருகிறார்கள். (சிங்களவர்களால் வரவழைக்கப்படுகிறார்கள் என்றே குறிப்பிடலாம்) கடலில் தொழில் செய்கிறார்கள்.

தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் சிங்கள மீனவர்களுக்கு இல்லை. துறைமுகவாயிலில், துறைமுகத்தினுள் எல்லாம் சிங்கள மீனவர்கள் மீன்பிடிக்கிறார்கள். அதன் மூலம் பெருமளவு வருமானம் ஈட்டிக் கொள்கிறார்கள். தமிழ் மீனவர்கள் தமது குடும்பத்தைக் கொண்டு நடத்த திண்டாடுகின்றார்கள். இவ்வாறே விவசாய ரீதியிலும் கந்தளாய் குளத்தின் கீழ் பெருமளவான நிலப்பரப்பில் சிங்கள விவசாயிகளே செய்கை பண்ணுகிறார்கள். தமிழ், முஸ்லீம் மக்களின் விவசாய உற்பத்தி சிங்களவருடன் ஒப்பிடும் இடத்தில் குறைவாகவே காணப்படுகிறது. சிங்கள மக்களின் விவசாய உற்பத்தி பொருட்கள் கூடிய விலையிலும் தமிழ் மக்களின் விவசாய உற்பத்திப் பொருட்கள் குறைந்த விலையிலுமே சிங்களவர்களால் கொள்வனவு செய்யப்படுகின்றது. சிங்கள விவசாயிகளுக்கு இலவசமான உள்ளீடுகள் குறைந்த விலையில் மானியங்கள் என்றெல்லாம் வழங்கப்படுகிறன.

இவற்றுக்கெல்லாம் தீர்வு காணப்படவேண்டும் என்றுதான் அன்று திருகோணமலையின் தமிழ் மக்கள் பேரவை தலைவராக இருந்த விக்னேஸ்வரன் அவர்கள் சிறீலங்கா அரசுக்கும் பன்னாட்டு துறை சார்ந்தவர்களுக்கும் அறிக்கைகள் ஊடாக வாரம் ஒரு பிரச்சினை என்று தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார், வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு புரியும் பல கொடுமையான உண்மைகள் இவரது அறிக்கைகள் மூலம் அம்பலமாகியது. இவ்வாறு இவரின் செயற்பாடுகளைப் பார்த்து பொறுக்கமுடியாமல்தான் சிறீலங்கா அரசின் திட்டமிடலுக்கு அமைய தமது கண்ணைத் தமது விரலாலேயே குத்துவது போல, தமிழ் இனத் துரோகிகளைக் கொண்டு தமிழர்களின் விடிவிற்காக உழைத்த இவரைக் கொல்லத் திட்டம் தீட்டப்படுகின்றது.

(தொடரும்...)

நன்றி்:ஈழமுரசு

மேஜர் சுவர்ணன்

ஓயாத அலைகள் – 3 என்ற பெயரில் விடுதலைப் புலிகள் பெரும் தொடர்ச்சமரொன்றை சிறிலங்கா அரசபடைகளின் மேல் தொடுத்திருந்த நேரமது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கநாளில் வன்னிக் காடுகளில் சுழன்றடிக்கத் தொடங்கிய ஓயாத அலைகள் இப்போது யாழ்ப்பாணப் பக்கத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதன் முதற்கட்டமாக கட்டைக்காடு - வெற்றிலைக்கேணிக் கடற்கரைகளைக் கைப்பற்றிய நிலையில் யாழ் சாலையில் நெஞ்சை நிமிர்த்தியிருந்த பரந்தன் படைத்தளத்தையும் புலிகள் கைப்பற்றி, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நேரம். இப்போது உமையாள்புரம் இராணுவ முகாமைச் சூழ அவ்வப்போது 'சில்லறைச் சண்டைகள்' மூண்டு தணிந்து கொண்டிருந்தன.

Ratha_M


ஒருநாள் இரவு உமையாள்புரத்தில் புலிகளின் தாக்குதலணியொன்று எதிரி மீதான திகைப்புத்தாக்குலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. அவ்விடத்தில் நிலைகொண்டிருந்த இம்ரான் பாண்டியன் படையணியைச் சேர்ந்த மேஜர் சங்கர் தலைமையிலான ஒரு கொம்பனியே அந்தத் தாக்குதலுக்கான ஆயத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அது பெருமெடுப்பான நிலமீட்புத் தாக்குதலில்லை. எதிரிகள் சிலரைக் கடுமையான காயத்துக்குள்ளாக்கும் நோக்கத்தோடு நடத்தப்படும் தாக்குதல். இவை யாவும் சுவர்ணன் தலைமையிலான அணியொன்றை மையமாக வைத்துத்தான் நடத்தப்படுகிறது. இந்தத் தாக்குதல் திட்டம் நடைபெறப்போகும் நேரத்தில் சுவர்ணன் தனது அணியோடும் ‘பொருளோடும்’ இராணுவத்தின் முன்னணி நிலைகளைக் கடந்து தென்மராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்தான்.

1996 ஆம் ஆண்டு ஆனிமாதத்தின் நடுப்பகுதியில் ஒருநாள். வன்னிக் காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நாங்கள் மும்முரமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். வேறிடத்திலிருந்து கழற்றப்பட்டுக் கொண்டுவரப்பட்டிருந்த லக்சபானா மின்கோபுரமொன்றை காட்டுக்குள் ஓரிடத்தில் மீளப் பூட்டும் வேலைதான் அது. அதற்கான கற்றூணை நிலத்துள் நாட்டும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. ஆழக்கிண்டிய கிடங்கில் கற்றூணை இறக்கிவிட்டோம். இனி நிமித்திவைத்து மண்போட்டு மூடவேண்டும். கல்லோ தொன் கணக்கில் நிறையுடையது. மூன்றுபக்கமிருந்து கேபிள்கள் போட்டு இழுத்து நிமிர்த்திவைத்திருக்க ஒருவர் தூணில் கேடர்கள் பொருத்தி நிலைப்படுத்த வேண்டும். அதன்படி நாங்கள் மூன்றுபக்கமிருந்து இழுத்து தூணை நிமிர்த்திவிட்டநிலையில் கேடரைப் பூட்ட வேண்டிய சுவர்ணன் அதைச் செய்யாமல் எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். தூணை இழுத்து வைத்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கைகடுத்தது.

“டேய் சுவர்ணன்! என்ன மிலாந்திக் கொண்டிருக்கிறாய்? கெதியா கேடரைப் பூட்டு” இது ரகுவண்ணா.

“சுவர்ணன் மாஸ்டர் எண்டெல்லோ கூப்பிடச் சொன்னனான்? அப்பிடிக் கூப்பிட்டு வேலையைச் சொல்லுங்கோ, செய்யலாம்.” இது சுவர்ணன்.

“டேய்! ஆளப்பார் தேவாங்கு மாதிரி இருந்துகொண்டு மாஸ்டரோ?…. பகிடியை விட்டிட்டு கெதியாப் பூட்டடா, கை கடுக்குது” ஒருபக்கத்தில் கேபிளை இழுத்துப்பிடித்திருந்த மைந்தன் கத்துகிறான்.

சுவர்ணன் அசைவதாயில்லை. செங்கோல் பிடித்த மன்னன் போல ஒருகையில் கேடரைப்பிடித்தபடி மறுகையை இடுப்பில் வைத்தபடி ஒயிலாக ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் வேறு ஆட்களுமில்லை. அடிக்கப் போவதென்றாலும் ஒருவர் கேபிளை விட்டுவிட்டுத்தான் போகவேண்டும்.

“சுவர்ணன் மாஸ்டர், அச்சா மாஸ்டரெல்லோ, ஒருக்கா கேடரைப் பூட்டிவிடுங்கோ மாஸ்டர்”… ஒருமுனையிலிருந்த குமுதன் கெஞ்சினான். அதன்பிறகுதான் சுவர்ணன் தனது வேலையைச் செய்தான். அன்றைய செயலுக்குப் பரிகாரமாக தேங்கிநின்ற சேற்றுநீரில் எங்களால் புரட்டியெடுக்கப்பட்டான்.

இப்படித்தான் இருப்பான் சுவர்ணன். எந்தநேரமும் ‘சீரியசாக’ பகிடி விட்டுக் கொண்டிருப்பான். தன்னை மாஸ்டர் என்றுதான் அழைக்க வேண்டுமென்று அடிப்படைப் பயிற்சி முடிந்து சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய காலத்திலேயே கதைக்கத் தொடங்கிவிட்டான். உச்சிவெயிலில் வாட்டியெடுக்கப்பட்ட நிலையில் கொட்டிலுக்கு வந்தால் சுவர்ணனின் சேட்டைகள் இன்னும் கொதியைக் கிழப்பும். அதுவும் கோபம் உச்சத்துக்கு வரும்போது திக்கத் தொடங்கிவிடும் ரகுவண்ணாவை வேண்டுமென்றே அவன் படுத்தும்பாடு சொல்லி மாளாது. தன்னை மாஸ்டர் என்று சொல்லச் சொல்லிச் நச்சரிக்கும் எந்தவிடத்திலும் சிறுபுன்னகைகூட அவனிடம் வராது. புதிதாக அவனோடு பழகுபவர்கள் அவன் சீரியசாகவே கதைப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். ஆனால் சுவர்ணன் சிரிப்பதில்லை. எல்லாவற்றையும் சீரியசாகவே கதைத்துக் கொண்டிருப்பான்.

யாழ்ப்பாணத்தை விட்டு வன்னிக் காட்டுக்குள் வந்த புதிதில் சுவர்ணின் அணி பட்டபாடு சொல்லி மாளாது. மிகக்கடுமையான வேலைகள் எமக்கிருந்தன. கிணறு வெட்டுவது, காட்டுக்குள் பாதைகள் போடுவது, தளம் அமைப்பது, பதுங்கு குழிகள் வெட்டுவது என்று மிகமிகக் கடுமையான வேலைகள். அந்தநேரத்தில் சுவர்ணன் செய்யும் சேட்டைகள் சம்பந்தப்பட்டவர்களை விட மற்றவர்கள் வயிறு குலுங்கிச் சிரிக்குமளவுக்கு இருக்கும்.

ஒருகட்டத்தில் எமது கொம்பனி மறுசீரமைக்கப்பட்டது. அப்போது புதிதாக 50 கலிபர் ஆயுதத்துக்கான எட்டுப் பேர் கொண்ட அணியொன்று உருவாக்கப்பட்டது. அதில் சுவர்ணனும் ஒருவன். இவ்வளவுநாளும் சுவர்ணன் வேறு அணியிலிருந்ததால் அவனது குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்த எமக்கு இப்போது அனுபவிக்க வேண்டியிருந்தது. அதிலொன்றுதான் மேற்சொன்ன கற்றூணை நிறுத்தும் வேலையின்போது நடந்தது. இதுபோல் ஏராளம் சம்பவங்களுள்ளன. ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக ஏதாவது குறும்பு செய்துகொண்டிருப்பான். அவனது ‘மாஸ்டர்’ பம்பல் எத்தனை மாதமானாலும், எத்தனை தடவைகள் திரும்பத் திரும்ப நடந்தாலும் ஒவ்வொரு முறையும் மறக்க முடியாத நினைவாகவே பதிந்துவிடும்.

50 கலிபர் அணி தேர்வு செய்யப்பட்டு விட்டது என்றாலும் எமக்கான ஆயுதம் வழங்கப்படவில்லை. சும்மா ‘கலிபர் ரீம்’ என்ற பேரில் அலைந்துகொண்டிருந்தோம். உண்மையில் அது கனரக ஆயுதங்களுக்கான பிரிப்பாக இருக்கவில்லை, கனரக வேலைகளுக்கான அணிப்பிரிப்பாகவே அமைந்துவிட்டது. வேலைகள் பங்கிடப்படும்போது ஆகக்கடுமையாக வேலைகளே எமது 50 கலிபர் அணிக்கு வழங்கப்படும். அந்த வழியே வந்ததுதான் ரவர் பூட்டும் வேலையும். ‘உவங்கள் கலிபர் ஒண்டும் தரப்போறேல. உது சும்மா மடார் வேலை செய்யிறதுக்கு ஒரு ரீம் தேவையெண்டதுக்காக பிரிச்சதுதான்’ என்று எமக்குள் பம்பலாகப் பேசிக் கொள்வோம். இந்த ‘மடார்’ வேலைகளைச் செய்யும் அணியில் சுவர்ணன் இருப்பது எப்பேர்ப்பட்ட விளைவு? பின்னாளில் GPMG ஆயுதத்துக்கென ஓரணி பிரிக்கப்பட்டபோது அதிகம் மகிழ்ந்தது நாம்தான். எமது கொம்பனிக்கு நல்லதொரு கனரக ஆயுதம் கிடைக்கிறது என்பதற்காகவன்று, எமது சுமைகளைப் பங்கிட இன்னோர் அணி வந்த மகிழ்ச்சியே அது. எமது கலிபர் அணிக்கான கடின வேலைகள் அவர்களோடும் பங்கிடப்பட்டன.

சுவர்ணின் நகைச்சுவையுணர்வு அலாதியானது. எமது கொம்பனியிலிருந்த அணிகள் காட்டுக்குள்ளிருந்த தளத்திலேயே தனித்தனிக் கொட்டில்களில் தங்கியிருக்க, எமது 50 கலிபர் அணி சற்றுத்தள்ளி வெட்டைக்கு அண்மையாகத் தங்கியிருந்தது. அதிகதூரம் எம்மை நடக்கவைத்த கடுப்பு எமக்குள் இருந்தது. ‘கலிபரைத் தந்திட்டு வெட்டைக்குப் பக்கத்தில விட்டாலும் அதில விசயமிருக்கு. இது சும்மா பேருக்கு ஒரு ரீமை வைச்சுக்கொண்டு வெட்டைக்குப் பக்கத்தில இருங்கோ எண்டா என்ன நியாயம்?’ என்று சுவர்ணன் பேசிக்கொண்டிருப்பான்.

அதுவரை அணியின் பெயரில் மட்டுமே கொண்டிருந்த கலிபர் ஒருநாள் இரவில் எமது கொட்டிலுக்கு வந்தது. அதற்கு முன்பு நாங்கள் 50 கலிபர் பார்த்திருக்கிறோம். அமைப்பில் இணையமுன்பும் பார்த்திருக்கிறோம், இணைந்தபின்னரும் பார்த்திருக்கிறோம். சிறப்புப் பயற்சி பெற்ற தளத்தில் 50 கலிபர் அணியொன்றும் பிறிம்பாகப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னும் நெருக்கமாக அவ்வாயுதத்தை அறிந்திருக்கிறோம். தூக்கிப் பார்த்திருக்கிறோம். அதுவரை நாம் பார்த்ததெல்லாம் பெல்ஜியத் தயாரிப்பான 50 கலிபர் ஆயுதம். நல்ல உருப்படி. நல்ல நிறையும்கூட. அதைத் தூக்குவதற்கும் இயக்குவதற்கும் மிகுந்த உடற்பலமும் பயற்சியும் தேவை. ஆயுதத்தைப் பார்த்தாலே ஒரு பயமும் மதிப்பும் தோன்றும். அதை இயக்குபவர்களை வித்தியாசமாகப் பார்க்கத் தோன்றும்.

ஆனால் இப்போது எமக்குத் தரப்பட்டிருப்பது அப்படிப்பட்ட ஆயுதமில்லை. அதை 50 கலிபர் என்று சொன்னபோது சிரிப்புத்தான் முதலில் வந்தது. 50 கலிபர் ஆயுதத்துக்கென எமது மனதிலிருந்த விம்பம் இவ்வாயுதத்தோடு பொருந்தவில்லை. இது மிகவும் நிறைகுறைந்த, ஒல்லியான ஓர் ஆயுதம். சீனநாட்டுத் தயாரிப்பு. வந்தவர்கள் இறக்கிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள். நம்பமுடியாமல் குமுதன் குழல்விட்டத்தை அளந்தான். 12.7 mm வருகிறது, அப்போ சரிதான், இது 50 கலிபர் தான்.

முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

மறுநாள் காலை ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு எமது தளத்தின் ஒன்றுகூடலுக்குச் செல்ல வேண்டும். இதைக் கொண்டுபோனால் 50 கலிபர் என்று யாரும் நம்பப்போவதில்லை. நம்பினாலும் எமக்கான மதிப்பு இருக்கப்போவதில்லை. 'இதைவிட ஒரு PK LMG யே திறம் போல கிடக்கு' என்று யாராவது நக்கலடிக்கக் கூடும். இதுவரை கட்டியெழுப்பியிருந்த விம்பம் கலைந்துபோய்விடும். சுவர்ணன் ஒரு திட்டத்தைப் போட்டான். ஆயுதத்தைப் பாய்களால் சுற்றி, பிறகு படுக்கை விரிப்பால் சுற்றி கொஞ்சம் பெரிய உருப்படியாக்கினான் சுவர்ணன். அடுத்துவந்த ஒருகிழமைக்கு எமது கொம்பனிக்கு அப்படி உருப்பெருப்பிக்கப்பட்ட உருப்படியைத்தான் எமது 50 கலிபர் என்று காட்டிக் கொண்டிருந்தோம். எமது கொட்டில்பக்கம் யாரையும் வரவிடாமலும் பார்த்துக் கொண்டோம்.

calibre50


மீட்கப்பட்ட முல்லைத்தீவில் 1997 தைமாதம் 50 கலிபர் பயிற்சிக்காகப் போயிருந்தோம். அங்கும் அவனது சேட்டைகள் தொடர்ந்தன. கடற்புலி அணியிலிருந்து பயிற்சிக்கு வந்திருந்த சிலர் இவனை உண்மையிலேயே ஒரு பயிற்சியாசிரியர் என்று நினைக்க வைத்துவிட்டான். பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்சூட்டுப் பயிற்சிக்கான நாள். பத்து ரவைகளைத் தந்து பனையில் கட்டப்பட்டிருக்கும் பட்டத்துக்குச் சுடச் சொன்னார்கள். ஒரு விசையழுத்தத்தில் எவ்வளவு குறைவான ரவைகளைச் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு எம்மால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். ஒரு விசையழுத்தத்தில் அதிகபட்சம் மூன்று ரவைகளுக்கு மேல் சுடாமலிருப்பதே நல்ல பெறுபேற்றைப் பெற உதவும். அதேநேரம் மொத்தச் சூட்டு நேரமும் கவனிக்கப்படும். பத்து வினாடிகளுக்குள் பத்து ரவைகளையும் சுட்டிருக்க வேண்டும். நாங்களெல்லோரும் மூன்று அல்லது நான்கு விசையழுத்தங்களில் பத்து ரவைகளைச் சுட்டோம். ஓரளவு நல்ல பெறுபேறுதான். சுவர்ணனின் முறை வந்தது. ஒரே விசையழுத்தல்தான். பத்தும் பறந்து போனது. முக்காலியின் முன்கால் அப்படியே எழுந்து அந்தரத்தில் நின்றது. அந்த நிலையிலேயே எங்களைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான். 'எருமை!! எல்லாத்தையும் காத்தில பறக்கவிட்டிட்டு பெரிய றம்போ மாதிரி போஸ் குடுக்கிறான் பார்'.
ரகுவண்ணா சொன்னார். சூட்டுப்பயிற்சிக்குப் பொறுப்பான பயிற்சியாசிரியர் முகத்தில் கடுப்பு. ஆனால் சுவர்ணனைப் பொறுத்தவரை எல்லாம் நல்லபடியாகவே நடந்தது போல் நடந்துகொண்டான்.

சுட்டுவிட்டு நேரே ஆசிரியரிடம் போன சுவர்ணன், நிறுத்தற் கடிகாரத்தைப் பார்த்தபோது அது இரண்டு வினாடிகள் சொச்சத்தைக் காட்டியது.

‘உது பிழை மாஸ்டர், பத்து ரெளண்ட்சும் ஒரேயடியா அடிக்க ஒரு செக்கனுக்கும் குறைவாத்தான் பிடிக்கும். நீங்கள் சரியான நேரத்தில அமத்தேல’ என்றான். வாத்தியாரின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

பயிற்சி முழுவதும் முடிந்து முல்லைத்தீவிலிருந்து எமது தளத்துக்குத் திரும்பியிருந்தோம். அப்போது புதிதாக வேறு படையணியிலிருந்து நூறுபேர் வரை எமது தளத்துக்கு வந்திருந்தார்கள். வேறோர் அலுவலாக சுவர்ணன் தவிர்த்து நாங்கள் சிலர் வெளியே ஒருகிழமை சென்றுவிட்டுத் தளம் திரும்பியபோது புதிதாக வந்த கொம்பனி ‘சுவர்ணன் மாஸ்டர்’ என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தது. இவ்வளவுநாளும் அவன் பட்ட கஸ்டங்கள் வீண்போகாமல் தனது இலக்கை அடைந்திருந்தான் சுவர்ணன். நாங்கள் தலையிலடித்துக் கொண்டோம்.

இப்போது அவன் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருந்தான். தான் ஒரு ‘பிஸ்டல் காய்’ என்று சொல்லவும் அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருந்தான். இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு நாங்களும் பயணித்தோம். இயக்கத்தில் பிஸ்டல் என்பது தகுதியை நிர்ணயிக்கும் ஓர் ஆயுதமாக அப்போது இருந்தது. ‘பிஸ்டல் காய்’ என்றால் அவர் பெரிய தளபதி என்பது கருத்து. சுவர்ணன் தன்னை பிஸ்டல் காயாக பாவனை பண்ணத் தொடங்கியிருந்தான். இந்தப் புதுக்கொடுமை தொடங்கியதால் ‘மாஸ்டர்’ கொடுமையிலிருந்து நாங்கள் தப்பித்திருந்தோம்.

கணேஸ் தான் அதிகம் மாட்டுப்படுபவன். கணேஸ் தன்னுடைய மெய்க்காப்பாளன் என்று சொல்லிக்கொள்வான். ‘கணேஸ்! அண்ணனின்ர பிஸ்டலை ஒருக்கா எடுத்தா’ என்று கட்டளைகள் வரும். அந்தநேரத்தில் கையில் கிடைக்கும் கட்டைகளைத் தூக்கி எறிந்து ‘இந்தா உன்ர பிஸ்டல்’ என்று கணேஸ் பதிலளிக்கத் தொடங்கியபிறகு சுவர்ணன் தனது மெய்க்காப்பாளனை மாற்றிவிட்டான்.

முகத்தில் சின்னச் சிரிப்புக்கூட இல்லாமல் அவன் அடிக்கும் லூட்டிகள் அளவு கணக்கற்றவை. மிகமிக அவசரமாக அணியை வரச்சொல்லி அழைப்பு வந்திருக்கும். எல்லோரும் ஆயத்தமாகி வரிசையாக நிற்கும்போது சுவர்ணன் மட்டும் அங்கிங்கென்று ஏதோ தேடிக்கொண்டிருப்பான்.

‘டேய் சுவர்ணன்! என்ன கோதாரியத் தேடுறாய்?’

‘என்ர பிஸ்டலைக் காணேல. நீயே எடுத்தனீ?’

அணிமுழுவதிடமும் உதைவாங்கித்தான் அன்று வெளிக்கிடுவான்.

எதிர்பாராத சந்தர்ப்பமொன்றில் கொம்பனிப் பொறுப்பாளர் சுவர்ணனை அணித்தலைவராக்கிவிட்டார். நாங்கள் ஆனந்தக் கூத்தாடினோம். அப்பாடா! இனி உவனின்ர தொல்லைகள் இருக்காது என்று பெருமூச்சு விட்டோம். ஆனால் இரண்டு நாட்களின்மேல் அது நீடிக்கவில்லை. அவன் அடித்த பிஸ்டல் குழறுபடியில் மீண்டும் பழையபடி கலிபர் சூட்டாளனாகவே நியமிக்கப்பட்டான்.

rathaஇப்படியெல்லாம் பிஸ்டலை வைத்துக் கனவு விளையாட்டுக்களை நடத்தி எங்களை எரிச்சல்படுத்தியும் மகிழ்வித்தும் வைத்திருந்த சுவர்ணன் நிசமாகவே ‘பிஸ்டல் காய்’ ஆனான். அதுவும் தேசியத் தலைவரிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.
. ratha
ஒன்றாக இருந்த நாம் காலவோட்டத்தில் பிரிந்து பணிகள் மேற்கொண்ட போது சுவர்ணன் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் கடமையாற்றினான். 2002 இல் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஏற்படும்வரைக்கும் லெப்.கேணல் ராதா வான்காப்பு அணி இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரங்கமாகச் செயற்பட்டு வந்தது.

இப்போது உமையாள்புரத்தில் ஆயத்தப்படுத்தப்பட்ட சண்டைக்கு வருவோம். ஆனையிறவைச் சூழவுள்ள பகுதிகளின் தாக்குதல் நடத்தப்படும்போது கடுமையான காயங்களுக்கு உள்ளாகும் படையினரை பலாலி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல சிறிலங்கா வான்படையின் பெல் ரக உலங்கு வானூர்தியே பயன்படுத்தப்பட்டு வந்தது.. வரும்வழியிலோ அல்லது திரும்பிச் செல்லும்போதோ அவ்வானூர்தியைத் தாக்கியழிக்கும் விதமாக ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இதற்காக, விமான எதிர்ப்பு ஏவுகணையைச் சுமந்தபடி ஓர் அணி தென்மராட்சிப் பகுதிக்குள் ஊடுருவி நிலையெடுத்திருந்தது. அந்த அணியின் தலைவனாகவும் ஏவுகணையை இயக்குபவனாகவும் சுவர்ணன் இருந்தான். வானூர்தியின் பாதையொழுக்கு ஏற்கனவே வேவு பார்க்கப்பட்டிருந்தது. சுவர்ணனுக்கான இலக்கை வரவைப்பதற்காகவே இம்ரான் பாண்டியன் படையணியின் ஓரணி மேஜர் சங்கரின் தலைமையில் களத்தில் இறங்குகிறது. ஆனால் அத்தாக்குதலின் பின்னாலுள்ள உண்மைக்காரணம் சிலரைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.

உமையாள்புர இராணுவத் தளம் மீதான தாக்குதலுக்கான திட்டம் மட்டுப்படுத்தப்பட்ட அளவைக் கொண்டது. இராணுவத்தரப்பில் கடுமையான காயக்காரரை உண்டாக்குவதன் ஊடாக குறிப்பிட்ட உலங்கு வானூர்தியை வரவைப்பதே முதன்மை நோக்கம்.

திட்டத்தின்படி தாக்குதல் நடத்தப்பட்டு எதிரிக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடியே காயக்காரரை ஏற்ற உலங்குவானூர்தி வந்தது. வரும்போது தாக்குதல் நடத்தப்படவில்லை. திட்டம் தெரிந்தவர்களுக்கு பதட்டம். ஏவுகணையோடு நிலையெடுத்திருக்கும் சுவர்ணனின் வீச்செல்லையைத் தாண்டி வானூர்தி பயணித்தாலேயே திட்டத்தில் பிசகு ஏற்பட வாய்ப்புண்டு. அல்லது எதரியின் பகுதிக்குள் நிலையெடுத்திருக்கும் அணியை எதிரியணிகள் கண்டு தாக்குதல் நடத்தினாலும் பிசக வாய்ப்புண்டு. சுவர்ணனுடன் சீரான தொடர்பு இருந்தது. எல்லாம் சரியாக நடக்குமென்று தகவல் தந்துகொண்டிருந்தான்.

காயக்காரரை ஏற்றிக்கொண்டு பலாலி திரும்பிக் கொண்டிருந்த உலங்கு வானூர்தி எதிர்ப்பார்த்தபடியே சுவர்ணனின் எல்லைக்குள் வந்தது. அன்று அந்த இலக்கு சுவர்ணனால் அழிக்கப்பட்டது.

அவ்வெற்றிகரத் தாக்குதலை நடத்தியதற்குப் பரிசாக கைத்துப்பாக்கியொன்று தேசியத் தலைவரால் சுவர்ணனுக்குப் பரிசளிக்கப்பட்டது.

முன்பு எம்மை ‘பிஸ்டல் காயாக’ எரிச்சல்படுத்திய, மகிழ்ச்சிப்படுத்திய சுவர்ணன் உண்மையிலேயே ஒரு கைத்துப்பாக்கியைத் தனது திறமைக்கான பரிசாகப் பெற்றுக்கொண்டான்.

ஈழவிடுதலைக்கான போராட்டப்பயணித்தில் தொடர்ந்து லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பணியாற்றிய மேஜர் சுவர்ணன் பின்வந்த ஒருநாளில் தாயக விடுதலைக்காக தனது மூச்சை நிறுத்திக் கொண்டான்.

மேஜர் சுவர்ணனுக்கும் அவனைப் போல் ஈழவிடுதலைக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் எமது வீரவணக்கம்.

அன்பரசன்

Labels

2ம் லெப் ஈழம் எம்.ஜி.ஆர் கடற்கரும்புலி கப்டன் கரும்புலிகள் காணொளிகள் கேணல் தமிழின உணர்வாளர் தமிழீழ படையணி தமிழீழச் சின்னங்கள் தலைவரின் சிந்தனைகள் தலைவர் பிரபாகரன் தலைவர் பிரபாகரன் தொடர் தியாக தீபம் திலீபன் தியாகிகள் திரைப்படம் துரோகம் தேசத்தின் குரல் நாட்டுப்பற்றாளர் நினைவலைகள் படைத்துறை பண்பாடு பாடல் பிரிகேடியர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் பிரிகேடியர் தீபன் பிரிகேடியர் பால்ராஜ் புதுவை இரத்தினதுரை போராட்ட வரலாறு மாமனிதர் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரை மாவீரர் நினைவுச் சின்னம் மாவீரர் பட்டியல் மாவீரர்கள் மேஜர் லெப் லெப்.கேணல் வன்னி அவலம் வான்கரும்புலிகள் வான்புலிகள் வாழ்த்துகள் விடுதலை தீப்பொறி வீரவரலாறு வீரவேங்கை
தேசியத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவு செய்ய
புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் 2009